காமன்வெல்த், ஐபிஎல்; அல்கொய்தா மிரட்டல்


காமன்வெல்த், ஐபிஎல்; அல்கொய்தா மிரட்டல்

பிற நாடுகள் வீரர்களை இந்தியாவில் நடக்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் , உலகக் கோப்பை ஹாக்கி போட்டி மற்றும் ஐபிஎல்- சீசன் 3 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுப்பக் கூடாது என அல்கொய்தா எச்சரிக்கை விடுத்துள்ளது. புனேவில் நடந்துள்ள வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கையை அல்கொய்தா விடுத்துள்ளது .  தில்லியில் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் அடுத்த வாரம் தொடங்கவுள்ளன. இதில் பங்கேற்க 10 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தில்லி வரவுள்ளனர்.

இந்த நிலையில் அல்-கொய்தா தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு விளையாட்டு வீரர்களை அனுப்பாதீர்கள் என்று அந்த மிரட்டல் தகவலில் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் தீவிரவாதியும், அல்கொய்தாவின் மூத்த கமாண்டர்களில் ஒருவனுமான இலியாஸ் காஷ்மீரி பெயரில் இந்த மிரட்டல் தகவல் ஆசியா டைம்ஸ் ஆன் லைனுக்கு வந்துள்ளது.
 
அதில் இருப்பதாவது:-

இந்தியாவில் நடக்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு இனி எந்த வீரர்கள், வீராங்கனைகளையும் எந்த நாடும் அனுப்பக்கூடாது என்று உலக நாடுகளை கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் இந்தியாவில் நாங்கள் கடும் தாக்குதல்களை நடத்தப்போகிறோம்.
 
இந்தியாவில் விரைவில் உலகக்கோப்பை ஆக்கிப்போட்டி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ளன. இந்த போட்டிகளுக்காக வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பவேண்டாம்.மீறி அனுப்பினால் கிரிக்கெட் வீரர்கள் உள்பட அனைவர் மீதும் தாக்குதல் நடத்துவோம்.
 
விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்க ரசிகர்களையும் இந்தியா செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று உலக நாடுகளை எச்சரிக்கிறோம். மீறி அனுப்பினால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. அவ்வாறு வந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்த நாடுகளே பொறுப்பு. காஷ்மீரில் இருந்து இந்தியப் படைகள் வெளியேறும் வரை, காஷ்மீரிகள் தங்களது எதிர்காலம் குறித்து சுய நிர்ணய உரிமை பெரும் வரை எங்களது தாக்குதல்கள் தொடரும் என்று அந்த மிரட்டல் தகவலில் கூறப்பட்டுள்ளது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)