காமன்வெல்த் போட்டி ஏற்பாடு: பிரதமர் உத்தரவு


காமன்வெல்த் போட்டி ஏற்பாடு: பிரதமர் உத்தரவு

image

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடப்பதற்கு அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லியில் மத்திய இணையமைச்சர் பிருத்விராஜ் சவான் இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே காமன்வெல்த் போட்டிகள் அக்டோபர் 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

போட்டி நடக்கும் மைதானங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தயாராகாதது, நடைபாலம் இடிந்தது, மைதானத்தில் ஓடுகள் சரிந்தது, சுகாதாரம் சரியில்லை என்ற குற்றச்சாட்டு, வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பல்வேறு நாடுகள் விலகுவதாக எச்சரிக்கை, டெல்லியில் தொடர் மழை என பிரச்னைகள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகத் தலையிட்டு, ஆலோசனை நடத்தினார்.

இக் கூட்டத்தில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி, விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், துணை நிலை ஆளுநர் தேஜிந்தர் கன்னா, மத்திய அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக் கூட்டம் குறித்து மத்திய இணை அமைச்சர் பிரித்விராஜ் சவான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போட்டி தொடங்க சில நாள்களே உள்ள நிலையில், இப் போட்டி வெற்றிகரமாக நடைபெற எல்லாவித முயற்சிகளையும் தொடர்புடையவர்கள் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டிருப்பதாகக் கூறினார்.

இக் கூட்டத்துக்கு போட்டிக்கான ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சுரேஷ் கல்மாடி அழைக்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அரசுத் துறையினர் மட்டுமே இக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். போட்டி ஒருங்கிணைப்பு குழு அரசுத் துறை இல்லாததால் கல்மாடி அழைக்கப்படவில்லை என்றார்.

டெல்லி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் டெல்லியின் குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதி ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதுடன் குறைகள் இருந்தால் களையவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் ஷீலா தீட்சித் வெள்ளியன்று உத்தரவிட்டார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)