சிறப்பு விசாரணைக் குழு முன் மோடி ஆஜராகவில்லை


சிறப்பு விசாரணைக் குழு முன் மோடி ஆஜராகவில்லை

image

குஜராத் பிரிவினைவாதக் கலவரம் தொடர்பாக விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி.) முன்னிலையில், அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி ஞாயிறன்று ஆஜராகவில்லை.

மோடி ஆஜராவார் என்ற எதிர்பார்ப்பில் இந்தக் குழு உறுப்பினர்கள் காந்தி நகரில் தங்களுடைய அலுவலகத்தைத் திறந்துவைத்து காத்திருந்தனர். ஆனால் மோடி வரவில்லை.

அவர் வராதது குறித்து அவர்களுக்குத் தகவல் ஏதும் தெரிவிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. அதே சமயம், இந்தக் குழுவின் தலைவரான ஆர்.கே. ராகவன் ஊரிலேயே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் மாநிலம் முழுக்க வகுப்புக் கலவரம் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் நடந்த இக்கலவரத்தை அடக்க மாநில போலீஸ் தவறியது. அப்போது முதலமைச்சர் பதவியில் நரேந்திர மோடி இருந்தார்.

அகமதாபாத் நகரில் குல்பர்க் சொசைட்டி என்ற முஸ்லிம் குடியிருப்புக்குள் புகுந்த வன்முறை கும்பல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாஃப்ரி உள்பட 69 பேரைக் கொன்றது.

அந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்த இஷான் ஜாஃப்ரி மாநில போலீஸ் அதிகாரிகளையும் அருகில் உள்ள காவல் நிலையங்களையும் தொடர்பு கொண்டு உதவிக்கு வருமாறு கோரினார். ஆனால் போலீஸ் படை வராமலேயே இருந்துவிட்டது.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்கு பதிலடியாக சிறுபான்மைச் சமூக மக்கள் தாக்கப்படட்டும் என்று வேண்டுமென்றே மாநில போலீஸ் படையைச் செயல்பட விடாமல் தடுத்துவிட்டார் நரேந்திர மோடி என்று பிரதான எதிர்க் கட்சியான காங்கிரசும், சிறுபான்மை அமைப்புகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

எனவே இந்தக் கலவரங்களை அடக்கத் தவறிய முதலமைச்சர் நரேந்திர மோடி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் அப்போதைய மாநில உயர் அதிகாரிகளும் சேர்ந்து மொத்தம் 63 பேர் மீது இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜகியா ஜாஃப்ரி, உச்ச நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

கலவரங்களை அடக்கத் தவறியதுடன், வன்முறையாளர்களைத் தண்டிக்கவும் அரசு தவறிவிட்டது என்று அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மாநில போலீசார் இந்த வழக்குகளை சரியாக விசாரிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருதியதால் மத்திய போலீஸ் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி ஆர்.கே. ராகவன் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது. அந்தக் குழு விசாரணைக்கு வருமாறு முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு கடந்த 11-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அதை ஏற்று அவர் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

உச்ச நீதிமன்றத்தையும் சட்டத்தையும் பாரதிய ஜனதா மதிக்கிறது. சட்டரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை சட்ட நிபுணர்களின் ஆலோசனையின்படி குஜராத் அரசு செய்யும் என்று பாரதிய ஜனதா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நரேந்திர மோடி ஆஜராகாதது குறித்து பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவிக்கையில், சட்ட ஆலோசனையின்படி மோடி ஆஜராகவில்லை என்று மட்டும் குறிப்பிட்டார். வேறு கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை.

சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராக அச்சம் கொண்டு ஓடி ஒளிகிறார் முதல்வர் நரேந்திர மோடி என்று காங்கிரஸ் கட்சி குறைகூறியுள்ளது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)