நடிகை ஜோதிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது
நடிகை ஜோதிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது
நடிகை ஜோதிகா-நடிகர் சூர்யா தம்பதிக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது.
வாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, முகவரி, வேட்டையாடு விளையாடு, மொழி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கும் ஜோதிகா, திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகி விட்டார். இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு ஏற்கனவே தியா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜோதிகா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜோதிகாவுக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (07-06-10) காலை 4.03 மணிக்கு ஜோதிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே பெண் குழந்தை இருப்பதால், ஜோதிகா மற்றும் குடும்பத்தினர் ஆண் குழந்தை வேண்டும் என விரும்பினர். அவர்களின் விருப்பப்படியே ஆண் குழந்தை பிறந்திருப்பதால் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷம் அடைத்தனர்.
ஜோதிகாவுக்கு குழந்தை பிறந்ததை அறிந்த திரையுலக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.